குஷ்புவின் பேச்சில் தவறு இருப்பதாக தெரியவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

நடிகை குஷ்பு ‘சேரி’ குறித்து தெரிவித்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில், தமிழகம் – புதுச்சேரியில் திமுக கூட்டணிக் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழக அரசு நிறைவேற்றிய மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால், முதல்வர் பின்னால் பெண்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் மீது தமிழக மக்கள் இன்றும் பற்று வைத்து, ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கின்றனர். நடிகை குஷ்பு ‘சேரி’ குறித்து தெரிவித்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், அவரது பேச்சின் முழு விவரம் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.