மிக்ஜாம் புயல் பாதிப்பு: அண்ணாமலையிடம் விசாரித்த ஜேபி நட்டா!

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவசரமாக அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசினார். புயல் பாதிப்பை பற்றி கேட்டறிந்த அவர் பாஜக சார்பில் நிவாரண உதவிகள் வழங்குவதாக உத்தரவிட்டதோடு தமிழக பாஜகவினருக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.

வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக உருமாறி உள்ளது. இந்த புயல் நாளை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது. தற்போது இந்த புயல் படிப்படியாக நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவி வருகிறது. இந்த புயல் ஆந்திரா நோக்கி மெதுவாக நகர்ந்து செல்கிறது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். அதோடு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு படையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் புயல் பாதிப்பு விஷயங்களை அவரிடம் கேட்டறிந்தார். அதோடு பாஜக சார்பில் உதவிகள் செய்வதாக அவர் உறுதியளித்ததோடு, தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் புயல் பாதிப்புள்ள பகுதிகளில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார். இதனை அண்ணாமலை உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா என்னை தொடர்புகொண்டு பேசினார். சென்னை உள்பட தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். அவருக்கு நன்றி. அதோடு அண்டை மாநில பாஜக சார்பில் நிவாரண உதவிகள் வழங்குவதாக உறுதியளித்தார். அதோடு மாநகராட்சி, மாநில அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்களுடன் சேர்ந்து பாஜகவினர் உதவவும் அறிவுரை வழங்கினார்” என குறிப்பிட்டுள்ளார்.