மிக்ஜாம் மீட்பு பணிக்கு ஓரணியாய் திரள்வோம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

மிக்ஜாம் புயல், சென்னையைவிட்டு விலகி ஆந்திராவை நோக்கி நகர்ந்துவிட்டதால், சென்னையில் மழையின் அளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது, மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற துவங்கியுள்ளது.

இந்த சமயத்தில் எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

அண்மை காலத்தில், சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்தைவிட, மிக்ஜாம் புயல் பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயர்ச்சேதசம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/தடுத்திருக்கிறோம். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.

இன்னலில் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனதத்தின் துணைகொண்டு வெல்வோம். அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்துவிட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.