சென்னையில் பெருமழை: முதல்வர் ஸ்டாலினுக்கு போன் போட்ட பினராயி விஜயன்!

சென்னை மழை வெள்ளம் தொடர்பான நிலவரங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைத்து கேட்டறிந்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வரலாறு காணாத அளவு பெருமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. மூன்று மாதங்கள் பெய்ய வேண்டிய கனமழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்ததுதான் இதற்கு முக்கிய காரணம் என்கிறது தமிழக அரசு. பெருமழை காரணமாக சென்னையை சூழ்ந்துள்ள பெருவெள்ளத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதுமே இதுவரை இல்லாத அளவு இருளில் மூழ்கியது. இணைய சேவையும் முடங்கியதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.

சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் அங்குள்ள மக்கள் அவதியடைந்துள்ளனர். படகுகளில் அவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர்களும் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வீடுகளில் வெள்ள நீர் புகுந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் அழைத்த நமது அண்டை மாநிலமான கேரள முதல்வர் பினராயி விஜயன், சென்னை வெள்ள நிலவரங்கள் தொடர்பாக கேட்டறிந்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடுமையான இயற்கை சீற்றத்தால் சென்னை தத்தளிக்கிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பேசினேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்துக்கு கேரளாவின் முழு ஆதரவையும் வழங்குகிறது. இந்த சோகமான சம்பவத்தில் இருந்து மீண்டெழுந்து தமிழகம் முன்னேற்றம் அடைய ஒன்றுபடுவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “கேரள முதல்வர் பினராயி விஜயனின் அழைப்பிற்கும், உடன் நிற்போம் என்று கூறியதற்கு நன்றி. சென்னை படிப்படியாக சீரடைந்து வருகிறது. கேரள மக்கள் சார்பான உங்களின் உண்மையான அக்கறை எங்கள் இதயங்களை அரவணைக்கிறது. ஒன்றாக இணைந்து சவாலை சமாளிப்போம்” என்றும் கூறியுள்ளார்.