தமிழக மக்களை இப்படி மழை வெள்ளத்தில் தவிக்க விட்டு விட்டார்களே: சசிகலா வேதனை!

“2015-ம் ஆண்டு மழையை ஜெயலலிதா எப்படி கையாண்டார் என்று பார்த்திருந்தாலாவது திமுக ஆட்சியாளர்கள் அதில் இருந்து பாடம் கற்றிருக்க முடியும். அப்படி இல்லாமல், தமிழக மக்களை இப்படி மழை வெள்ளத்தில் தவிக்க விட்டு விட்டார்களே” என்று சசிகலா கூறினார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாங் புயல், வட தமிழகத்தை புரட்டிப் போட்டு சென்ற நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் மழை வெள்ளத்துக்கு நடுவே சிக்கி தவித்து வருகின்றனர். பலரின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அவர்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக அரசாங்கத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து சசிகலாவிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சசிகலா கூறியதாவது:-

இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் தோல்வி என்று தான் சொல்ல வேண்டும். சென்னையில் மழை ஒன்றும் புதுசு கிடையாது. அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போதே இப்படியொரு மழையை நாம் பார்த்திருக்கிறோம். அந்த சமயத்தில் அம்மா அந்த மழையை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதற்கு பிறகு மக்களை பாதிக்காத வண்ணம் அவர் திறமையாக அதை சமாளித்தார்.

அம்மா செய்ததை பார்த்திருந்தாலே, மழை பாதிப்புகளை கையாள்வது எப்படி என்று திமுக ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதையும் அவங்க செய்யல. திமுக ஆட்சியை பொறுத்தவரை நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை சரியாக பயன்படுத்த தெரியாத ஆட்சியாளர்கள் இருப்பது தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். இந்த மழையால் தமிழக மக்கள் படும் அவஸ்தைகளை என்னால் பார்க்க முடியவில்லை. இந்த 4, 5 நாட்களாக மக்களின் கஷ்டங்களை தொலைக்காட்சியில் பார்த்த படிதான் இருக்கிறேன். அந்த வேதனையில் என்னால் சரியாக சாப்பிட கூட முடியவில்லை. இப்படி மக்கள் கஷ்படப்படுறாங்களே.. அரசாங்கம் ஒன்னும் செய்ய மாட்டேங்குதே என வேதனையில் தவித்துக் கொண்டிருந்தேன். இவ்வாறு சசிகலா கூறினார்.