பெரும் துயரில் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் மீள 2 மாதங்கள் ஆகும்: அண்ணாமலை!

மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகர் மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி சென்னை நகரோடு தொடர்பையே இழந்தது. தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும், இந்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கக்கூடிய அம்பத்தூர் பகுதியில், லட்சக்கணக்கான மக்கள், இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பை நம்பி உள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் நிறுவனங்களை சூழ்ந்த மழை வெள்ளத்தால், நிறுவனங்களில் பணிகள் கடுமையாக பாதித்துள்ளது. அம்பத்தூரில் மழை வெள்ளத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்னாமலை, அம்பத்தூர் பகுதொ தொழில் முனைவோர்களை இன்று சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

மிக்ஜம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தமிழக பாஜக சார்பாக தொழில் முனைவோர்களை இன்று சந்தித்தோம். 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிவரும் சென்னையின் தொழிற்துறை மையமாக விளங்கும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரியாக இரண்டு மாதங்கள் வரை ஆகும் என கூறப்படும் நிலையில் இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது.

கடன் வாங்கி தொழில் செய்து வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூறியதோடு, தங்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். நாளை தமிழகம் வரவிருக்கும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களிடம், கோரிக்கை மனுக்களை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.