வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?: அண்ணாமலை

தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். புயல் கரையை கடந்த நாளில் சென்னையில் அளவுக்கு அதிகமான மழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்தாலும் இன்னமும் சில இடங்களில் மழை நீர் வடியாமல் இருப்பதனால் அங்குள்ள மக்கள் சிரமமடைந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக அரசு பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு முன்னேற்பாடுகளை சரிவர செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது என்றும் விமர்சித்துள்ளனர். அதேபோல் சென்னையில் பாலுக்கு பல்வேறு இடங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் பல இடங்களில் பால் பாக்கெட்டுகளுக்காக அலைமோதியதையும் காண முடிந்தது.

இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் பால் விநியோகத்தில் சில இடங்களில் மட்டுமே சிக்கல் இருப்பதாகவும் அதையும் விரைவாகச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ்ஜை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதை, திமுக அரசு தொடர்ந்து வருவது கண்கூடு. இப்போது ஒரு படி மேலாக, ஆவின் நிறுவனம், தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடக மாநில நந்தினி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ன விலைக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரங்களை, அமைச்சர் மனோ தங்கராஜ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்தும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் பால் தட்டுப்பாடு என்று மக்கள் அவதிப்பட்டதை மறைத்து, ஆவின் நிறுவனத்தின் பால் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ் . கேள்வி கேட்டால் அவதூறு பரப்பும் வழக்கமுள்ளஅமைச்சர் மனோ தங்கராஜ் மீது ஏற்கனவே அவதூறு வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இந்தக் கேள்விகளுக்காவது அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.