புயலால் பாதிக்கப்பட்ட சிறு,குறு நிறுவனங்கள்: மத்திய நிதியமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகி ஆந்திராவில் கரையைக் கடந்த மிக்ஜாம் புயல் சென்னையில் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4ஆம் தேதி விடாது பெய்த வரலாறு காணாத கனமழை சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெருவெள்ளத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

இதனிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன், கனமழையால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணத்தை அபராதமின்றி கட்டவும் கால அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “அண்மையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்து உற்பத்தி இழப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

4 மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4,800 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இடைவிடாத பெரு மழையினால் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியம் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசு மின் விநியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய்துள்ளபோதும், இந்நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக உற்பத்தியை துவங்க சிறிது காலம் தேவைப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் திருப்பி செலுத்தும்
காலத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கூடுதல் நடைமுறை மூலதன கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அறிவுறுத்தவும் , காப்பீட்டு தொகையை காலதாமதமின்றி மதிப்பீடு செய்து உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்திடவும் நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டு எழ உறுதுணையாக அமையும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.