குழந்தை உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவம்: அண்ணாமலை கண்டனம்!

“நாட்டிலேயே மருத்துவக் கட்டமைப்புக்காக அதிகம் நாடப்பட்ட தமிழகம் இன்று ஊழல் திமுக அரசால் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது” என்று சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

மாரத்தான் நடத்துவதிலும், முதல்வரின் தவறுகளுக்கு முட்டுக் கொடுப்பதிலும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பரபரப்பாக இருப்பதால், நாட்டிலேயே மருத்துவக் கட்டமைப்புக்காக அதிகம் நாடப்பட்ட தமிழகம் இன்று ஊழல் திமுக அரசால் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது. இந்த ஆட்சி விரைவில் மீளா நிலைக்குச் செல்லும். அந்த நபரால் தனது மனைவியை மருத்துவமனைக்கு சரியான நேரத்துக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் இல்லாமல் போயிருக்கிறது. பின்னர், அரசு மருத்துவமனை இறந்த குழந்தையின் சடலத்தை அட்டைப் பெட்டியில் போட்டு கொடுத்துள்ளது.

பெயரளவில் ஓர் இழப்பீட்டுத் தொகையை அறிவித்துவிட்டு இந்த விவகாரத்தை ஓரங்கட்டாமல் இதுமாதிரியான நஷ்ட ஈடுகள் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கும் இதுபோன்ற பாதிக்கப்பட்ட மக்கள் நேர்கொண்ட அத்தனை துன்பங்களுக்கும் விடையாகாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதே காலத்தின் தேவை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் இறந்து பிறந்த குழந்தையின் உடலை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் பிணவறை பணியாளர் முறையாக துணியால் சுற்றாமல், அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இறந்த குழந்தையை அட்டைப் பெட்டிக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பணியாளரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.