வெள்ள நிவாரணம் கொடுப்பதில் ஆளுங்கட்சி தலையிடக் கூடாது: டிடிவி தினகரன்!

தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரணம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான கோரிக்கையை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி பெய்த கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாக இடைவிடாது வெள்ள மீட்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் சில இடங்களில் மட்டும் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் 16ஆம் தேதி ஆரம்பிக்கும் நிலையில், அடுத்த 10 நாட்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ரேஷன் கடைகளில் நிவாரணம் வழங்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், வங்கிக் கணக்குகளில் நிவாரணத்தை நேரடியாக செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. நிவாரண நிதியை நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை போதுமானதாக இருக்காது என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் நிவாரணத் தொகை ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இன்றி முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வியும் அச்சமும் மக்களிடம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமல்லாமல், ரேஷன் அட்டை இல்லாதவர்கள், குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், வீடுகளின்றி சாலையோரங்களில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.