ரசிகர் மன்ற பணிகளுக்கு நடுவே துறை ரீதியிலான பணிகளையும் பாருங்க அமைச்சரே: அண்ணாமலை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது ரசிகர் மன்றப் பணிகள் நடுவே, தனது துறை ரீதியிலான பணிகளையும் கவனிப்பது நல்லது என்று அண்ணாமலை சாடியுள்ளார்.

சென்னை கொரட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவர்களை வைத்து மொட்டை மாடியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டி செய்யப்பட்டது. மாணவர்கள் ஆபத்தான முறையில் நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியயோவை பார்த்த பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், சென்னை கொரட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவர்களை வைத்து மொட்டை மாடியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்துள்ள காணொளி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மாணவ மாணவியரை, இது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் சிதிலமைடைந்து இருக்கும் சுமார் பத்தாயிரம் அரசுப் பள்ளிக் கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவோம் என்று சொல்லிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பலமுறை நினைவுபடுத்தியும் அதனைப் பற்றிப் பேசுவதே இல்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு மேலாக, அரசுப் பள்ளி மாணவர்களை கழிப்பறைகள் சுத்தம் செய்ய வைப்பது, ஆபத்தான உயரத்தில் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள், அரசுப் பள்ளி மாணவ மாணவியரை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தி வருவதை வெளிப்படையாக்குகின்றன என்றும் அண்ணாமலை தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல தலைவர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கிய அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கது என குறிபிட்டுள்ள அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது ரசிகர் மன்றப் பணிகள் நடுவே, தனது துறை ரீதியிலான பணிகளையும் கவனிப்பது நல்லது என சாடியுள்ளார்.