சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன். இதனைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியை பறிகொடுத்தார். மேலும் 3 ஆண்டுகள் தண்டனை காலத்துக்குப் பின் 6 ஆண்டுகள் பொன்முடி தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

1996-2001-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ1.36 கோடி பொன்முடி சொத்து குவித்தார் என 2011-ல் தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பொன்முடி மனைவி விசாலாட்சியும் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை ஜூன் மாதம் விடுதலை செய்தது. ஆனால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். இதனால் நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.

இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்கையில், வருமானத்துக்கு அதிகமாக 64.09% பொன்முடி சொத்து குவித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த வழக்கில் பொன்முடி குற்றவாளி; பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 (இன்று) அறிவிக்கப்படும்; அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

இதனையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். பொதுவாக வழக்குகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களது எம்பி அல்லது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படும். தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி அமைச்சர் பதவியை பறிகொடுத்துவிட்டார். மேலும் இந்த 3 ஆண்டு தண்டனை காலத்துக்குப் பின் 6 ஆண்டுகள் தேர்தலில் பொன்முடியால் போட்டியிடவும் முடியாது.