தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு!

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையேயான காவிரி பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், அதற்கு நிரந்தர தீர்வாக காவிரி மேலாண்மை ஆணையம் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதற்கு துணையாக காவிரி ஒழுங்காற்று குழுவும் செயல்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என 4 மாநிலங்களுக்கான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி ஆணையமே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அதனை செயல்படுத்துவது மட்டுமே மாநிலங்களின் பணி.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்றால் மட்டும் கர்நாடகாவுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. காவிரி ஆணையம் உத்தரவிட்டபோதும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்தது. இதற்காக தமிழகம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றமே குட்டு வைத்த பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதில் பிடிவாதம் காட்டி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களாக வர வேண்டிய நியாயமான தண்ணீர் வரவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. ஆனாலும், டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 30 அடியாக சரிந்தது. ஆகவே, அணை வறண்டுவிடாமல் இருக்க டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதே சமயம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த நவம்பர் 23ஆம் தேதி கடைசியாக கூடிய காவிரி ஒழுங்காற்று குழு டிசம்பர் இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அறிவுறுத்தியது. ஆனால், கர்நாடகம் அதனை முறையாக செயல்படுத்தவில்லை. எனினும், மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 70 அடியைத் தாண்டி முன்னேறி வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 91வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது, கர்நாடக அணைகள் நீர்மட்டம், நீர் வரத்து மற்றும் மழைப் பொழிவு குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. தமிழக அரசு தரப்பில், இந்த ஆண்டு முழுமைக்கும் தமிழ்நாட்டிற்கு 60 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இன்னும் 90 டிஎம்சி தண்ணீர் நிலுவை உள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 14 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தமிழகத்திற்கு தண்ணீரே திறக்க முடியாது என கர்நாடகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. கர்நாடகா காவிரி படுகையிலுள்ள 4 அணைகளிலும் 52.84 சதவிகிதம் நீர் பற்றாக்குறை நிலவுவதாகவும், மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணையில் 50 டிஎம்சி வரை தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், சம்பா மற்றும் குறுவை பயிர்கள் அறுவடை முடிந்துவிட்டதால் தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த காவிரி ஒழுங்காற்று குழு, கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது. தமிழகத்திற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 3,128 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், அத்துடன் ஜனவரி மாதம் முழுவதும் 1,030 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது. ஆனால், இந்த பரிந்துரையை கர்நாடகா ஏற்கவில்லை.

கர்நாடகம் ஏற்காததால் இன்னும் ஓரிரு நாட்களில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூட உள்ளது. ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை அப்படியே கர்நாடகாவுக்கு உத்தரவாக பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை கர்நாடக அரசு ஏற்று தண்ணீர் திறந்துவிடுமா என்பதுதான் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.