சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டியிருக்கிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து பேசினார். தொடர்ந்து மக்கள் பணத்தைதான் நிதியாக கேட்கிறோம்.. அவர்கள் அப்பா வீட்டு காசை கேட்க வில்லை என்று அமைச்சர் உதயநிதி விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது நிர்மலா சீதாராமன் கூறியதவது:-

அவுங்க (உதயநிதி) பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். சனாதன தர்மத்தின் போதும் அதை அழிக்க வரவில்லை.. ஒழிக்கவே வந்து இருக்கிறோம் என்று பேசினார் அல்லவா.. அவருடைய பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். அவுங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிற மாதிரி எல்லாம் பேசுகிறவர்கள்.. அவுங்க அப்பன் வீட்டு சோற்றை வைத்துக் கொண்டு இன்றைக்கு பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா அப்படின்னு கேட்க முடியுமா? என காட்டமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன். என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம். வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.