அண்ணாமலை மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதியை பெற்றுக் கொடுக்கட்டும்: கே.எஸ்.அழகிரி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரஷர் கொடுத்து மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதி பெற்றுக் கொடுக்கட்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாறு காணாத வெள்ளத்தையும் மழையையும் சென்னையும் மற்றும் தென் தமிழகமும் சந்தித்திருக்கிறது. இந்த நிமிடம் வரை ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவில்லை. அந்த நிதிக்கு பெயரே இயற்கை பேரிடர் நிதிதான். பேரிடர் ஏற்பட்ட உடன் அவர்கள் அதை அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஒரு வரி எழுதி அனுப்புவதற்கு ஒன்றிய அரசு இவ்வளவு தயங்குகிறது. மேலும் தமிழக மக்களை மாற்றான் தாய் மக்களாக பார்க்கிறது.

தமிழக பாஜக தலைமையில் இருக்கக்கூடியவர்கள் மோடிக்கு அழுத்தம் கொடுத்து நிதியை பெற்றுத் தர வேண்டும். இங்கு இருந்து கொண்டு ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதால் எந்த பலனும் கிடையாது. எந்த முயற்சியும் செய்யாமல் நடந்து கொண்டிருக்கிற வேலைகளை குறை சொல்வது பேரிடர் காலத்தில் ஏற்புடையது அல்ல. மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்.

மேலும் பிரதமர் பாராளுமன்றத்திற்கு வருவது கிடையாது, பத்திரிகையாளர்களை சந்திப்பது கிடையாது. பிரச்சனைகளுக்கு பதில் கூறுவது கிடையாது. ஆனாலும் அவர் பிரதமர். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதே கிடையாது. ஹிட்லருடைய ஆட்சிக்குப் பின்னர் மோடியின் உடைய ஆட்சியில் தான் இது போன்ற நிகழ்வுகள் பாராளுமன்றத்தில் நடக்கிறது. எதிர்க்கட்சி இல்லாத பாராளுமன்றம், பாராளுமன்றமே அல்ல. இதற்கு பாராளுமன்றம் என்று இலக்கணமே தகாது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

மழை வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாது. தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. கூடுதல் சிறப்பு நிதி வழங்க முடியாது என்று தமிழ்நாட்டின் மீது மிகுந்த வன்மத்தை வெளிப்படுத்துவது போன்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும். கிட்டத்தட்டத் தேசிய பேரிடர் அறிவிக்க முடியாது என்று சொல்வதன் மூலமாக தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை நிராகரித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார்.

நீண்ட காலமாகவே தமிழ்நாட்டு மக்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதைத்தான் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த வேதனையோடு எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்கும் முயற்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் பேசியுள்ள நிர்மலா சீதாராமனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.