தென் மாவட்டங்களை விரைந்து மீட்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. பலரது வீடுகள், வெள்ளம் சூழ்ந்ததால் இடிந்து விழுந்தன. வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதி செய்து வருகின்றனர். தலைமைச் செயலாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.