பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை சிபிசிஎல் நிறுவனம் வழங்க வேண்டும்: முத்தரசன்!

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை சிபிசிஎல் நிறுவனம் வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எண்ணூர் கச்சா எண்ணெய் கசிவு விவகாரத்தில் சிபிசிஎல் நிறுவனம் முழு பொறுப்பேற்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைபோராட்டம் சென்னை மணலியில் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலை வகித்தார். அப்போது செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-

புயலின்போது சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தில் (சிபிசிஎல்) இருந்து எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் மிகப்பெரிய அளவில் கடல்வளம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 8 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் படலத்தை அகற்ற விஞ்ஞான ரீதியாக நவீன முறை எதையும் கையாளாமல் மீனவர்களை மட்டுமே சிபிசிஎல் நிறுவனம் பயன்படுத்தி வருவது வேடிக்கையாக உள்ளது. இந்த பாதிப்புகளுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்திருந்தாலும்கூட, அவை போதுமானதாக இல்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பாதிப்பால் ஒரு மாத காலத்துக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை மீனவர்களுக்கு உருவாகியுள்ளது. இதனை கணக்கில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க சிபிசிஎல் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் இந்த போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.