பட்டியலினத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்க திமுக ஒத்துக்கொள்ளுமா?: வானதி

பாஜகவில் யார் வேண்டுமானாலும் பிரதமராகவும், குடியரசுத் தலைவராகவும் வர முடியும். ஆனால், ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்க திமுக ஒத்துக்கொள்ளுமா? என்று வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சர்ச்சை ஆகியுள்ளது. இதனிடையே, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “நிர்மலா சீதாராமன் தன்னை ஒரு பிரதமராக நினைத்துக் கொண்டு பேசுகிறார். அவரது பேச்சு அப்படிதான் இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் (பாஜகவினர்) எந்த மொழியில் பேசினால் புரியுமோ, அந்த மொழியில் தான் உதயநிதி பேசியிருக்கிறார்” எனக் கூறினார்.

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமனிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

திருமாவளவன் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடைய கட்சியில்தான் குஜராத்தில் சாதாராண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருக்கிறார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மோடி அவர்களை பாரத பிரதமராக்கி அழகு பார்த்த கட்சி தான் பாஜக. இந்தக் கட்சியில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் நாட்டின் உயர்ந்த பதவிகளுக்கு வர முடியும். அந்த நம்பிக்கையை தந்திருப்பது பாஜக தான்.

நான் திருமாவளவனிடம் நேரடியாக ஒன்றை கேட்கிறேன். நீங்கள் கூட்டணி வைத்திருக்கிற திமுக, ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவரை முதல்வர் நாற்காலியில் அமர்த்த ஒத்துக் கொள்ளுமா? குறைந்தபட்சம் கொள்கை அளவிலாவது அவர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று திருமாவளவனால் சொல்ல முடியுமா? ஆனால் எங்களால் சொல்ல முடியும். குடியரசுத் தலைவர்களாக, முதல்வர்களாக, பிரதமர்களாக பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை பாஜக கொண்டு வரும். கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.