எதுக்கு தமிழ்நாடுன்னு பேரை வெச்சுகிட்டு.. கருணாநிதி நாடுன்னு பேரு வையுங்க: சீமான்

சென்னை மாநகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் எதற்காக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்? சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தில் லூலூ மால்தானே வரப் போகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

திமுக அரசு தொலைநோக்கானதா? சென்னையில் தலைநகரில் பெருமாநகரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறதா? இருந்தது ஒன்று. அதையும் மூடிவிட்டீங்க இல்லையா? சென்னை பெருமாநகரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறதா தம்பி? எங்க தம்பி அது? ரூ110 கோடி செலவழிச்சு கட்டுனீங்கதானே.. இப்ப அதை என்ன செய்ய போறீங்க? வணிக வளாகம்.. லூலூவுக்குதானே.. லூலூ மாலுக்கு கொடுக்கத்தானே இந்த வேலையை செய்றீங்க? நான் கேட்டேனா? சென்னையில் இருந்து 40 கிமீ.. அங்கே கிளாம்பாக்கம்.. அப்ப சென்னையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை அவ்வளவுதானே.. ஒப்புக் கொள்ளுங்க.. கிளாம்பாக்கத்தில் இறங்கி எப்படி இங்க வருவது? அந்த பேருந்து நிலையத்தை சுற்றி எத்தனை பள்ளிக்கூடங்கள்? அந்த பிள்ளைகள் வாகனங்கள் கடக்கும் போது எவ்வளவு சிரமப்படுவாங்க? இதுதான் உங்க தொலைநோக்கா?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுனீங்க..இப்ப மதில் சுவரை இடிக்கிறீங்க.. யாரு கேட்டது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்? அதுல 70% அதிமுக செய்துவிட்டது.. நீங்க ரூ18 கோடியோ ரூ20 கோடியோ போட்டு முடிச்சுவிட்டு விட்டு உதயசூரியன் சின்னம் எதுக்கு அதுல? தம்பி உதயநிதி கேட்கிறாரே உங்க அப்பன் வீட்டு காசான்னு? நான் கேட்கிறேன்.. இது என்ன உங்க அப்பன் வீட்டு காசா? உங்க தாத்தா வீட்டு காசா? எதுக்கு உங்க தாத்தா பேரை வைக்கிற? இந்த நாட்டுல கருணாநிதியை விட்டா தலைவனே இல்லையா? எங்களுக்கு யாருமே இல்லையா? எழுதுனா அவருதான் எழுதினார்.. அதுக்கு ஒரு பேனா வைக்கனும்.. மருத்துவமனையா? அவரு பெயரு.. . ஏன் முத்துலட்சுமி ரெட்டி பெயரை வைக்க முடியாதா? முதன் முதலில் மருத்துவம் படித்த பெண் பெயரை வைக்க கூடாதா?

நூலகத்துக்கு தாத்தா பாண்டிதுரைத் தேவர் பெயரை வைக்கக் கூடாதா? 4-வது தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தவர் பாண்டித்துரை தேவர்.. அவர் பெயர் வைக்கக் கூடாதா? ஜல்லிக்கட்டு நடத்த நான் கேலரி கேட்டனா? நாங்க ஜல்லிக்கட்டு வரும் போது கட்டையை கட்டி ஓடவிட்டுட்டு அப்புறம் கழற்றிவிட்டுப் போய்விடுவோம். அதுக்கு எதுக்கு அவ்வளவு கோடியில் செலவு? கட்டிடம்? அதுக்கும் உங்க அப்பா பேருதானா? எதுக்கு தமிழ்நாடுன்னு பேரை வெச்சுகிட்டு.. தூக்கிரு.. கருணாநிதி நாடுன்னு பேரு வையுங்க.. கேட்டா செருப்பை கழற்றி அடி. அதிமுக முடிச்சிருந்தா கிளாம்பாக்கத்தில் இரட்டை இலை சின்னம் வைக்குமா? அது உங்க கட்சி காசா? என் காசு.. என் மக்கள் காசு.. அதுல என்ன உன் கட்சி சின்னத்தை வைக்கிறது? இவ்வாறு சீமான் கூறினார்.