எல்லா விஷயத்திலும் ஒரு முழுமை இல்லாத அரசாங்கமாகவே தமிழக அரசு இருக்கிறது: தமிழிசை

தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் பங்கேற்பது அவசியமா? என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் கேள்வியெழுப்பினார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம், “தமிழகத்தில் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துவது அவசியமா என பலர் கேள்வியெழுப்புகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து தமிழிசை செளந்தராஜன் கூறியதாவது:-

அய்யய்யோ.. நீங்க வேற.. அவங்க பண்ணா அது தப்பு கிடையாது. ரெண்டு மூணு நாளுக்கு முன்னாடி முரசொலியில் ஒரு கட்டுரை வெளியாச்சு. அதுல என்ன சொல்றாங்க.. தமிழ்நாட்டு வெள்ள பாதிப்பை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வரலனு எழுதி இருக்காங்க. பிரதமர் மோடி வராதது இருக்கட்டும். முதல்வர் ஸ்டாலின் எவ்ளோ நேரம் வந்து பார்வையிட்டாரு. வெறும் ஒரு மணிநேரம் இருந்துட்டு போயிட்டாரு.
நேற்று கூட கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவருமே கலந்து கொண்டிருக்கிறார்கள். கலைஞர் மீது நமக்கு எல்லாமே நன்மதிப்பு இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் தூத்துக்குடி உட்பட 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையை வானிலை மையம் கொடுத்திருக்கிறது. இப்போ கூட கோவையில் மழை பெஞ்சிட்டு தான் இருக்கு. நிலைமை இப்படி இருக்கும் போது, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் எல்லோரும் உட்கார்ந்துட்டு இருக்காரு.

அதுக்கு அப்புறம் வெள்ளம் வந்து சேதம் ஏற்பட்டால், மத்திய அரசு மீது பழியை தூக்கி போட்டுக்கலாம்ல. இப்படிதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை முதலில் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழியை தூக்கி போட்ருலாம்னு நினைக்கக் கூடாது. இன்று தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கு. போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் இருக்கு. வெள்ளத்தால் பிரச்சினை இருக்கு. எனவே முதலில் இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க வேண்டும். முதலீட்டாளர்களை ஈர்ப்பது மட்டும் நோக்கமாக இருக்கக்கூடாது. அதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஒரு நாட்டின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும், ஒரு மாநிலத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து முதலீட்டாளர்கள் வருவது இல்லை. தமிழ்நாடு மட்டுமில்லாமல்; பல மாநிலங்கள் அந்நிய முதலீட்டை ஈர்க்கிறார்கள். இதில் பாரத பிரதமரின் பங்கு முக்கியமானது.

ஒன்னுமில்ல.. இப்போ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அமைத்தார்கள். அதில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது என்று அனைவருக்குமே தெரியும். மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சாதாரண பேருந்து நிலையத்தை கூட சரியாக கட்டமைக்க முடியவில்லையா என மக்கள் கேள்வியெழுப்புகிறார். எனவே எல்லா விஷயத்திலும் ஒரு முழுமை இல்லாத அரசாங்கமாகவே தமிழக அரசு இருக்கிறது.

இதுவரை நாம் அனைவரும் கனவு கொண்டிருந்த அயோத்தி ராமர் கோயில் நமக்கு கிடைக்க போகிறது. ராமர் கோயிலில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. உரிமை இருக்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். அதே நேரத்தில், கும்பாபிஷேகத்துக்கு யாரை அழைக்க வேண்டும் என்பதை அயோத்தி கோயில் நிர்வாகத்தினர் தான் முடிவெடுக்க வேண்டும். அனைவரையும் அழைப்பார்கள். யார் அழைக்கப்பட்டார்கள், யார் அழைக்கப்படவில்லை என்பதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

நமது குடியரசு தலைவரை மரியாதைக்குரிய தலைவராக தான் மத்திய அரசு நடத்தி வருகிறது. ஆனால் திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராகவே வரக்கூடாது என்று கூறியவர்கள் தான், அவரை அங்கு அழைக்கவில்லை, இங்கு அழைக்கவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். குடியரசுத் தலைவருக்கு என்னென்ன மரியாதை தர வேண்டுமோ அதை நமது நாடு கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.