தமிழ்நாடு பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது: பியூஷ் கோயல்!

தமிழ்நாடு வரலாறு, கலாச்சாரம், இயற்கை வளம், கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் மத்திய ஜவுளி, வர்த்தகம், தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டில் அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:-

ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கு நிறைவேற வாழ்த்து. சந்திரயான்-3, ஆதித்யா எல் 1 வெற்றியால் உலகமே இந்தியாவை உற்றுநோக்குகிறது. நாட்டில் உள்ள பணி செய்யும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்றனர். வரலாறு, கலாசாரம், இயற்கையில் சிறந்த தமிழகத்திற்கு முதலீடு செய்ய வந்துள்ளனர். முதலீடு செய்ய வந்துள்ள அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காஞ்சி பட்டுப்போல பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சகோதரர் டி.ஆர்.பி.ராஜா இருவரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்நாட்டை மாற்றியமைப்பதில் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர். பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் செங்கோல், தமிழகத்தை சேர்ந்தது. இந்தியாவின் பண்பாட்டிற்கு தமிழக கலாச்சாரம் அளித்து வரும் பங்கு மிகப்பெரியது. இந்தியாவின் கலாச்சார தொடர்புகளை பிரதிபலிக்கவே காசி சங்கமம் போன்ற நிகழ்வுகள்.

2030ம் ஆண்டுக்குள் ‘1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற இலக்கை அடைய வாழ்த்துகிறேன். சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குனர் நிகர் ஷாஜி தமிழ்நாட்டின் தென்காசி என்ற சிறிய நகரில் இருந்து வந்தவர். அவருக்கு எழுந்து நின்று பாராட்டை தெரிவிப்போம். நாட்டில் உள்ள பணி செய்யும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, நாட்டின் பொருளாதார உயர்வில் பெண்கள் பங்களிப்பு உயர வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.