தற்போது பரவி வரும் கொரோனாவால் தமிழகத்தில் பாதிப்பில்லை: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு உள்நோயாளிகள் மற்றும் வேலை நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனை புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டு கட்டடத்தின் அமைப்பு குறித்த வரைபடத்தைப் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ துறை சார்ந்த கூடுதல் கட்டிடங்கள் கட்டி வரும் பணிகளுக்கு மருத்துவத் துறையில் எப்போதும் இல்லாத அளவுக்கு 119.26 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவி வரும் ஜே.என்.-1 என்ற கொரோனா வைரஸால் எந்த விதமான பாதிப்பும் கிடையாது. இருந்தபோதிலும் 20% பாதிப்புகள் இருக்கக்கூடிய நிலையில், அரசு தயாராக உள்ளது. குறைந்த எதிர்ப்பு சக்தியுடைய பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.