மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.. இந்த மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் மக்களை வாட்டிய நிலையில், இந்தமுறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் தினகரன் பதிவிட்டுள்ளதாவது:-

சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த சென்னை மற்றும் தென்மாவட்ட மக்கள், அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான மாவட்டங்களில் பலத்த கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம், அடுத்த இரு தினங்களுக்கு 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்துடன் முறையான தொடர்பில் இருந்து அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையை சரிவர கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டால் மழை பாதிப்பின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என பொதுமக்கள் கருதுகின்றனர்.

எனவே, அடுத்த 2 தினங்களில் பெய்யக்கூடிய மழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.