அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது: அமலாக்கத் துறை மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அதேநேரம் செந்தில் பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்றும், அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வருவதற்காக விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி, “ஏற்கெனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடர்கிறீர்கள்?” என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினார்.

பின்னர் அமலாக்கத் துறை தரப்பில், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கபட்டிருந்தது. அப்போது நீதிபதி, “மாநில காவல் துறை ஒரு நாளைக்கு 120 ஜாமீன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்கிறது. இந்நிலையில், ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறை கூறும் காரணம் ஏற்கும்படியில்லை” என அதிருப்தி தெரிவித்தார். பின்னர், இரு தரப்பு வாதங்களுக்காக ஜாமீன் மனு மீதான இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (ஜன.9) தள்ளிவைத்தார்.