செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல்நலனோடு வெளியே வர வேண்டும்: டிடிவி தினகரன்

செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கவலை தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை சென்னை புழல் சிறையில்தான் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே அவ்வப்போது உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி, ஓமந்தூரார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
கூறியதாவது:-

செந்தில் பாலாஜி என்னுடைய பழைய நண்பர்.. ஜெயலலிதா காலத்தில் இருந்தே எனக்கு தெரிந்தவர். அமமுகவிலும் இணைந்து பயணித்துள்ளார். பாவம் அவர்.. தற்போது சிறைச்சாலையில் இருந்து வருகிறார். நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை பார்த்தால் ஒரு நண்பராக தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல செந்தில் பாலாஜிக்கு நடந்துள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல்நலனோடு வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை.

நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அமமுக அணிலைப் போல செயல்படும். சிறுபான்மையின மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. எடப்பாடி பழனிசாமி போடும் வேடமெல்லாம் சிறுபான்மையின மக்களுக்கு நன்றாகவே தெரியும். வரும் தேர்தலில் அவர்கள் எடப்பாடிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். பழனிசாமி ஏமாற்றுப் பேர்வழி என எல்லோருக்கும் தெரியும். தான் ஆட்சி பொறுப்புக்கு வர காரணமாக இருந்தவர்கள் முதுகிலேயே குத்தியவர் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியை தொடர உதவியாக இருந்தவர்கள் முதுகில் குத்தினார். அனைத்திற்கும் மேல் தங்களை பாதுகாத்தவர்களை முதுகில் குத்தும் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல சிதறும் காலம் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வரும்.

சில கட்சிகளுடன் அமமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பாக அறிவிப்போம். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.