கோயம்பேடு மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விரைவில் மருத்துவமனை: சேகர்பாபு

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் மருத்துவமனை அமைக்கும் கருத்துரு உள்ளதாகவும், விரைவில் முதல்வர் அனுமதி பெற்று அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பொங்கலை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் சந்தை சில்லரை விற்பனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இந்த சந்தையில் இம்மாதம் 17-ம் தேதி வரையில் சுமார் 1000 வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு அதிக அளவு காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் மருத்துவமனை அமைக்க கருத்துரு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் அனுமதி பெற்று மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஜன 15 முதல் 17 வரை 3 நாட்கள் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.