ஆளுநரின் மனைவியை லேடி கவர்னர் என்று அழைப்பது மலிவான அரசியலாக தெரியவில்லையா: வன்னி அரசு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் மனைவியை ‘லேடி கவர்னர்’ என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு, “எந்தவித அதிகாரமும் இல்லாத ஆளுநர் மனைவியை எப்படி அந்தப் பெயரில் அழைக்கலாம்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆளுநர் ரவி தனது மனைவியுடன் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றுள்ளார். இதனிடையே, இதுதொடர்பான பதிவு ஒன்றை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்தது. அதில், “ஆளுநர் ரவி மற்றும் லேடி கவர்னர் திருமதி லஷ்மி ரவி ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி பிரகாரத்தை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், ஆளுநரின் மனைவியை லேடி கவர்னர் என்று ஆளுநர் மாளிகை கூறியிருப்பது தான் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதுகுறித்து விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மக்களாட்சி கோட்பாடு அடிப்படையில் ஆளுநர் என்பதே தேவையில்லாத ஒரு பதவி என பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பும், விவாதமும் தொடரவே செய்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆளுநர் எதிர்ப்பு என்பது கடவுள் எதிர்ப்பை போன்றே வலிமையாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பணி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ரவி, தான் எதற்காக வந்தோம் என்பதையே மறந்துவிட்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சனாதனம், குழந்தை திருமணம் பற்றி பெருமைப்பட்டு கொள்வது, ராம ராஜ்ஜியம் அமைப்போம் எனக் கூறுவது, தமிழ்நாட்டை தமிழகம் எனக் கூறி சிறுமைப்படுத்துவது என ரவியின் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மைக்காலமா, தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தனது மனைவியையும் ஆளுநர் ரவி அழைத்துச்செல்கிறார். அது அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால், அவரது மனைவிக்கான செலவுகளும் தமிழ்நாடு அரசையே சாரும். அதுவும் பரவாயில்லை.

ஆனால், ஆளுனர் மாளிகையானது ரவி அவர்களின் மனைவி திருமதி லட்சுமி ரவியை குறிப்பிடும் போதெல்லாம் “லேடி கவர்னர்” என குறிப்பிட்டு வருகிறது. கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்க அரசமைப்புச் சட்டம் வழி காட்டியுள்ளதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் மனைவியை கூட “லேடி சி.எம்” என எங்கேயாவது அழைக்கப்படுவது உண்டா? அப்படி இருக்க, எதற்காக ஆளுநர் மாளிகை இதுபோன்ற மலிவான அரசியலை செய்கிறது? கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என கூறும் ஆளுநர் மாளிகை, அவரது மகனையும்,பேரப் பிள்ளைகளையும் எப்படி அழைக்கும்? ஆளுநர் மாளிகையின் இந்த அதிபுத்திசாலித்தனத்தை கண்டு ஜனநாயகமே கைக்கொட்டி சிரிக்கும். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.