தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்!

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி நடுக்கடலில் கைது செய்வதும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் வாடிக்கையாக இருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13ஆம் தேதி அன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து கடந்த 13ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரையும் விசைப்படகையும் 15ஆம் தேதி கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர். அதேபோல 15ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 18 பேரையும் அவர்களது விசைப்படகுகளையும் 16ஆம் தேதி கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர். நான்கு நாட்களில் மூன்று முறை இது போன்ற அடாவடி நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களை தடுத்து நிறுத்திடவும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் இந்திய ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்சத் தீவை மீட்பதே பல ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். எனவே, கச்சத்தீவை மீட்டெடுக்க உரிய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் இந்திய ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.