சேலம் திமுக இளைஞரணி மாநாடு திடலுக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்!

திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சேலம் சென்றடைந்தார் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின். மாநாட்டு திடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருகை புரிந்து, இருசக்கர வாகன பேரணியை பார்வையிட்டார்.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜனவரி 21) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் சென்றடைந்தார். திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, வேறு விமானத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதியமே சேலம் சென்றடைந்தார். உதயநிதி ஸ்டாலினுடன் அவரது மகன் இன்பநிதியும் சேலம் வந்துள்ளார். நாளை மாநாடு நடைபெறவுள்ள திடலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகனுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினால் ஏற்றப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட திமுக இளைஞரணி மாநாட்டு சுடரொளியை திமுக முதன்மைச் செயலாளரும், மாநாட்டு ஒருங்கிணைப்பாளருமான அமைச்சர் கே.என்.நேரு இன்று சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலில் பெற்றார். அதனைப் பெற்று மாநாட்டுத் திடலில் ஏற்றி வைக்க உதயநிதியிடம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் முரசொலி புத்தக சாலை கண்காட்சியைத் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 1,500 பேர் கொண்ட இருசக்கர வாகனப் பேரணி, மாநாட்டுத் திடலுக்குச் சென்றது. அதனைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, 1,000 ட்ரோன்களைக் கொண்டு ட்ரோன் ஷோ நடத்தப்படுகிறது.

நாளை திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, மாநாட்டுத் திடலில் உள்ள கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, மாநாட்டுப் பந்தலை மாணவரணிச் செயலாளர் எழிலரசன் திறந்து வைக்கிறார். காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின், மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். பின்னர், தீர்மானங்கள் வாசிப்பு, மொழிப் போர் தியாகிகளின் படத்திறப்பு, திமுக முன்னணித் தலைவர்கள் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டுப் பந்தலில் 1.25 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. மொத்தம் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் மதியம் அசைவ விருந்து வழங்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.