திமுக இளைஞரணி மாநாடு நமத்து போன மிக்சர் போல நடந்து முடிந்திருக்கிறது: அண்ணாமலை

“திமுக இளைஞரணி மாநாடு நமத்து போன மிக்சர் போல நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் கூட பிரயோஜனமானது கிடையாது. அதை ஒவ்வொன்றாக தோலுரிக்கிறேன் பாருங்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அவர் தலைமையில் நடக்கும் முதல் மாநில மாநாடு இது என்பதால், இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டன. இந்த மாநாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட்டுவிட்டு, பாஜக மீது தான் விமர்சனங்கள் அள்ளி வீசப்பட்டன.
முழுவதுமாக கட்டப்படாத ராமர் கோயிலை மோடி திறந்து இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டினர். அதேபோல, தமிழகத்தில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் காலூன்றவே முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இவ்வாறு பாஜகவை அடித்து நொறுக்கும் மாநாடாகவே திமுக இளைஞரணி மாநாடு நடந்து முடிந்தது.

இந்நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

அண்ணே.. உங்க பத்திரிகை பாணியிலேயே சொல்றேன் கேட்டுக்கோங்க. தங்கை கொடியேற்ற.. அண்ணன் மகிழ்ந்து இருக்கையில் அமர.. அண்ணண் மகன் துதிபாட.. குடும்பக் கட்சியின் சாட்சிகளாக இருக்கக்கூடிய தலைவர்கள் அகம் மகிழ.. இனிதாக ஆட்டு பிரியாணியோடு நடந்து முடிந்தது திமுக இளைஞரணி மாநாடு. இதையெல்லாம் விட்டுருங்க. அந்த மாநாட்டுல போட்ட தீர்மானங்களுக்கு கொஞ்சமாவது தகுதி இருக்கானு பாருங்க.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதாக ஒரு தீர்மானம். நான் என்ன கேக்குறேன்.. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு கொண்டு போனது யாரு? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு செல்லப்பட்டது. அதற்கு பிறகு எத்தனை வருஷமாக காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது அவங்களோட திமுக கூட்டணியில் இருந்தாங்க? அப்போது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதை பற்றி ஏன் திமுக பேசல?

சரி.. அதையும் விட்ருவோம். அடுத்த தீர்மானம் என்ன? அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஆளுநர் துணைவேந்தராக இருக்கக்கூடாதாம். 1996-இல் உங்க கட்சியில் கல்வி அமைச்சராக இருந்த அன்பழகன் சட்டசபையில் என்ன பேசினார்? “முதலமைச்சர், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருந்தால் மாண்பு கெட்டுவிடும்.. அதனால் எங்களுக்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அந்த தீர்மானத்தை ரத்து செய்கிறோம் என அறிவித்தாரா இல்லையா?

அதுக்கு அப்புறம்.. வழக்கம் போல நீட்டை ஒழிப்போம் என்ற தீர்மானம். இந்த தீர்மானத்தால் என்ன பிரயோஜனம்னு கேட்டீங்கனா.. சேலத்தில் இருக்குற குப்பைக்கூளங்கள் எல்லாம் நிறைந்திருக்கிறது. நீட் வேண்டாம்னு மாநாட்டுல கையெழுத்து போட்ட பேப்பர்கள் எல்லாம் குப்பையில் தான் இருக்கிறது. தொலைக்காட்சிகளில் கூட அது செய்தியாக வந்தது. ஏனென்றால், திமுக காரர்களின் பிள்ளைகளே இப்போது நீட்டால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்கள் எப்படி அதை எதிர்ப்பார்கள். இப்படியாக நமத்து போன மிக்சரை போல திமுக இளைஞரணி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.

ஒற்றைக் கட்சி ஆட்சியில் இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, ஒற்றைக் குடும்பம்தான் ஆட்சியில் இருக்கக் கூடாது. இந்தியாவில் இனி ஒற்றைக் கட்சியான பாஜகதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

மாநில உரிமைகளை மீட்போம் என்று கட்சி தொடங்கியதிலிருந்து பேசிவரும் திமுக, இதுவரை எதை மீட்டுள்ளது? தமிழகத்தை திமுக குடும்ப அடாவடித்தனத்திடமிருந்து மீட்பதே பாஜகவின் கொள்கை. `திமுக ஊழல் ஃபைல்ஸ்’ குறித்த ஆடியோக்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும்.

`என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். `மோடியை விட்டால் வேறு பிரதமரே இல்லையா ?’ என்று கேட்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்கே.பி.முனுசாமி. அதிமுகவுக்கு எப்படி ஒரே ஒரு எம்ஜிஆர் இருந்தாரோ, அதேபோலத்தான் பாஜகவுக்கு ஒரே ஒரு மோடி. தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு, ஜன்னல்கள் எல்லாம் திறந்தே இருக்கின்றன. யாரெல்லாம் மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கூட்டணிக்கு வரலாம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.