ராகுல் காந்தி பாதுகாப்பு குறித்து அமித் ஷாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

அசாமில் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். யாத்திரையின் 10-வது நாளான நேற்று அசாமின் குவாஹாட்டி நகருக்கு அவர் பாத யாத்திரையாக சென்றார். சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் சென்றனர். அப்போது குவாஹாட்டி நகருக்குள் ராகுல் காந்தி நுழைய அசாம் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸார் அகற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அசாம் மிகவும் அமைதியான மாநிலம். நக்சலைட் அணுகுமுறை எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரானது. ராகுல் காந்தி மக்களை தூண்டி விடுகிறார். வன்முறை தொடர்பான வீடியோவை காங்கிரஸாரே வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய அசாம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். காங்கிரஸாரின் வன்முறையால் குவாஹாட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சூழலில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

அசாம் போலீஸார் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை பாஜக தொண்டர்கள் உடைத்து நெருங்க அனுமதிக்கின்றனர் அல்லது மீறல்களை கண்டு கொள்ளாமல் துணை நிற்கின்றனர். ராகுலுக்கும் அவருடைய குழுவினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். அசாமில் யாத்திரையின் முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறு இடையூறுகள் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துனை இடையூறுகளுக்கு மத்தியிலும் ராகுல் காந்தி திட்டமிட்டபடி யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அதனால் நீங்கள் தலையிட்டு அசாம் முதல்வரும், காவல்துறை டிஜிபியும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து ராகுல் காந்திக்கு தனிப்பட்ட முறையில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் இதில் தலையிட்டு அவருடைய, யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.