கருப்புக் கொடி காட்டிய மாணவர் அமைப்பினர்: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திவருகிறார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக செல்கிற வேளையில் கொல்லம் நில்லமேலியில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டது எஸ்எப்ஐ (SFI) மாணவர் அமைப்பு. ஆளுநரின் வருகையின் போது அவர்கள் எதிர்ப்பு முழக்கங்களுமிட்டனர். இதை கண்ட ஆளுநர் ஆரிப் முகமது கான் உடனடியாக தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தச் சொல்லி காரில் இருந்து இறங்கி மாணவர்களுக்கு எதிராக முழக்கமிட்டு அவர்களை அப்புறப்படுத்த சொல்லி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

எனினும், தொடர்ந்து மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக ‘சங்கி ஆளுநர் கோ பேக்’ என்பது போன்ற முழக்கங்களை எழுப்பியதுடன் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால், ஆளுநர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். “போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்வரை இடத்தை காலி செய்ய மாட்டேன்” எனக் கூறி சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் ஆளுநர் ஆரிப் முகமது கான். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிகொண்டுள்ளது.

அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை தலையிட வைப்பதாக குற்றம்சாட்டி எஸ்எப்ஐ மாணவர் அமைப்பு கேரள ஆளுநருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி, இன்றும் ஆளுநர் செல்லும் வழியில் கருப்புக்கொடி காண்பிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர். பதிலுக்கு ஆளுநரும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார். மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த 12 பேரை கைது செய்ததாக காவல்துறை கூறியும் போராட்டத்தை கைவிட ஆளுநர் மறுத்துவிட்டார். “50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். மற்ற மாணவர்களை கைது செய்யவில்லை, ஏன்” என்று கூறி போராட்டத்தை கைவிட ஆளுநர் மறுப்பு தெரிவித்தார். மாணவர்கள் மீது போடப்பட்ட எப்ஐஆர் விவரங்களை காண்பிக்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தி வருகிறார். மேலும் போலீஸ் அதிகாரிகளுடனும் ஆளுநர் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.