மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவு: சு.வெங்கடேசன்!

மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாவது செங்கல்லை எடுத்து வைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பி வைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை இந்தத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதுவரை சுற்றுச்சுவர் தவிர கட்டுமான பணிகளே தொடங்கவில்லை. எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கே இன்னும் உறுதியாக பதில் கிடைக்கவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை எம்.பி ஆகியோர் பங்கேற்றனர். மத்திய அரசு, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணியை தொடங்காமலேயே, இந்த மருத்துவமனை கல்லுரிக்கான 50 எம்பிபிஎஸ் இடத்துக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி, மதுரையில் வகுப்பறை வசதியில்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில், தற்காலிகமாக வகுப்புகளை தொடங்கியது. தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துக்கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றோடு, பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டி 5 வருடங்கள் ஆகின்றன. எனினும், இன்னும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்காத நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாவது செங்கல்லை எடுத்து வைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் எய்ம்ஸ் எங்கே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.