செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.31 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.31ம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜன.29ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு ஜனவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்கக் வேண்டும் எனக்கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவையும் விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களுக்கும் பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 17வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 230 நாட்களை கடந்தும் ஜாமீன் கிடைக்காமல் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.