நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் ஏழைக்குடிசைகள்: ஆளுநர் ரவி!

நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு கடந்த 1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து உயிர் தப்பிய தியாகி பழனிவேலை சந்தித்தார். இதனை தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆளுநர் ரவி.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, ‘1968’ படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான திரு.ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும் என்று ஆளுநர் ரவி பதிவிட்டுள்ளார்.

நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்றும் தனது மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட என்றும் ஆளுநர் ரவி பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஆளுநர் வருகையை கண்டித்து, கீழ்வெண்மணி வீரத் தியாகிகளின் 25-வது ஆண்டு நினைவுவளைவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.மாரிமுத்து, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா ஆகியோர் தலைமையில், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடியேந்தி திரளாக வந்தனர். அவர்களைப் போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகை செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து திருவாரூர் விளமலில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு, பகல் 1.40 மணிக்கு நாகை புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையில், ஆளுநர் வருகையைக் கண்டித்து, திருவாரூர் ரயில் நிலையம் அருகே நாகை எம்.பி. செல்வராஜ் தலைமையில் பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி காட்ட வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, எம்.பி.செல்வராஜ் உட்பட 200 பேரைக் கைது செய்தனர்.