தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: எடப்பாடி

தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் இன்று(நேற்று) இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்க பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது.

ரெயில் குப்பைகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு காணினும் போதைப்பொருட்களே நீக்கமற நிறைந்துள்ளன. நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்தவிற்பனைக் கிடங்கா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிதெழுந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுங்கள். இனி தமிழ்நாட்டில் போதை பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை.

காவல்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்து, இந்த போதைப் பொருட்களை புழக்குவோர் யாராக இருப்பினும், எவ்வித பாகுபாடும் இன்றி கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டை போதைப் பொருள் அறவும் அற்ற மாநிலமாக மாற்றவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும். மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோமெட்டபைன் போதைப்பொருள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத்தோமெட்டபைன் வரை நீளும் அனைத்து போதைப் பொருட்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை இந்த விடியா திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த விடியா திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய கடும் கண்டனம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.