பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி மிஸ்யூஸ் செய்திருக்கிறார்: மா. சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி மிஸ்யூஸ் செய்திருக்கிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்துடன் இணைந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று 2018-ம் தொடக்கத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். 2019-ல் மோடியே அதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். ஆனால் இன்னும் ஒற்றை செங்கலுடன் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நின்று கொண்டிருக்கிறது.

5 ஆண்டுகள் நிறைவடைந்தும் ஒற்றை செங்கலுடன் மதுரை எய்ம்ஸ் நின்று கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு சமூக வலைதளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மதுரையில் இருக்கக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடையூறாக இருக்கக்கூடிய மரங்களை அகற்றி தாருங்கள் எனக் கேட்டிருக்கிறார். எய்ம்ஸ் கட்டுவதற்கு மரங்கள் இடையூறாக இருக்கிறதாம். 15 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவரை எழுப்பிய மத்திய அரசு, மரங்களை எடுக்காமலா அதை எழுப்பி இருப்பார்கள்? எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது பாருங்கள்.

மரங்கள் எடுத்து தரவில்லையாம்.. நில ஆர்ஜிதம் செய்து தரவில்லையாம். நான் கேட்கிறேன். நில ஆர்ஜிதம் செய்து தராத இடத்திலா பிரதமர் நரேந்திர மோடி வந்து அடிக்கல் நாட்டினார்? நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் பிரதமர் வந்து எப்படி அடிக்கல் நாட்டலாம்? பிரதமரை எப்படி ஒரு முதல்வர் (எடப்பாடி பழனிசாமி) தவறாக வழிநடத்தலாம்? இப்படி ஏராளமான கேள்விகளை நம்மால் வைக்க முடியும். எனவே இதுபோல குழந்தைத்தனமாக சாக்குகளை சொல்லிக் கொண்டிருக்காமல், அறிவித்தபடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்ட வேண்டும். இவ்வாறு மா. சுப்பிரமணியன் கூறினார்.