தூத்துக்குடியில் நாங்க செத்து விழுந்த போது வந்து பார்க்காத நீங்க, இப்போ மட்டும் எதுக்கு வறீங்க: சீமான்

தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், மோடி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாட்டில் அவரால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். திருப்பூர் மற்றும் நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டங்களில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், மீண்டும் இன்று (மார்ச் 4) தமிழகத்திற்கு மோடி வருகை தரவுள்ளார். இன்று முதல் 5 நாட்களுக்கு அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதே அவர் தமிழகத்திற்கு அடிக்கடி படையெடுக்க காரணம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த சூழலில், மோடி நாளை தமிழகம் வருவது தொடர்பாக சீமானிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அவர் என்னங்க செய்வாரு. இப்படிதாங்க மோடியால் தமிழகத்திற்கு வர முடியும். தேர்தல் மூலமாக அவரால் வரவே முடியாது. சரி.. தமிழ்நாட்டுக்கு இப்படியாச்சும் சும்மா வந்துட்டு போவோம்னு அவர் வந்துட்டு இருக்காரு. எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வாங்க.

நீ தலைகீழா நின்னு தண்ணீர் குடிச்சாலும் ஜெயிக்க முடியாதுனு சொல்வாங்க. அப்புறம் இன்னொன்னும் சொல்லுவாங்க.. குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்துட்டு போனாலும் உன்னால ஒன்னும் செய்ய முடியாதுனு. இதுதான் மோடிக்கு நான் சொல்றது. தூத்துக்குடியில் நாங்க செத்து விழுந்த போது வந்து பார்க்காத நீங்க, இப்போ மட்டும் எதுக்கு வந்துட்டு இருக்கீங்க. இதெல்லாம் மக்களுக்கு தெரியாதா என்ன? இவ்வாறு சீமான் கூறினார்.