விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்!

விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% முழுமையாக எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று சந்தித்தார். அப்போது, வரும் லோக்சபா தேர்தலில் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணிய பிறகே முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

ஏற்கனவே இந்திய தலைமை தேர்தல் ஆணையர், சென்னைக்கு வருகை தந்தபோது அவரிடம் சமர்ப்பிக்க கோரிக்கை மனுவை தயாரித்திருந்தோம். அப்போது அவரை சந்திக்க முடியவில்லை. அதனை இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து சமர்ப்பித்திருக்கிறோம். அதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். முக்கியமான கோரிக்கையாக, விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். விவிபாட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை தனி பெட்டியில் போட்டு, அதனையும் முழுமையாக எண்ண வேண்டும். தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த கோரிக்கையை மக்களின் சார்பில் வலியுறுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

இன்றும் வட இந்திய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன. பழைய வாக்குச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புள்ளது என்ற அச்சம், பொதுமக்களால், கட்சி சார்பற்ற அமைப்பினரால் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 2 கட்டமாக விசிக ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல். அதற்கு எதிராக ஒரு சட்டத்தை பாஜக இயற்றி இருக்கிறது. இது கூடாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.