மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளது. இந்தத் தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் செல்லும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்தக் கட்சியும் அந்த சின்னத்தை கோரவில்லை என்பதாலும், தங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் மதிமுக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், நீதிமன்றத்தின் உத்தரவின்படி மதிமுக சார்பில் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பம் முறையாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதிமுக மனுவின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.