வேலை செய்யும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவோம்: ராகுல் காந்தி!

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் இளைஞர்களைக் கவரும் வகையில் ராகுல் காந்தி வேலை செய்யும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என அறிவித்துள்ளார்.

நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த லோக்சபா தேர்தலுக்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி இருக்கிறது. ஒரு பக்கம் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடக்கும் அதே நேரத்தில் பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது. மக்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகளும் தரப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த லோக்சபா தேர்தலில் இளைஞர்களைக் கவரும் வகையில் காங்கிரஸ் கட்சி ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். இன்றைய தினம் காங்கிரஸ் நாட்டின் இளைஞர்களுக்கு ஐந்து உத்தரவாதங்களை அளித்துள்ளது. காங்கிரஸின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் இது குறித்து முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டதாகத் தொடர்ந்து சாடி வரும் ராகுல் காந்தி, இந்த பிரச்சினையைப் போக்க 𝗥𝗶𝗴𝗵𝘁 𝘁𝗼 𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 எனப்படும் வேலைக்கான உரிமை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ், 25 வயதிற்குட்பட்ட அனைத்து டிப்ளமோ & பட்டம் பெற்றவர்களுக்கும் அரசு அல்லது தனியார் துறையில் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்குச் சிறந்த தொழில் பயிற்சி மட்டுமின்றி ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவி தொகையும் வழங்கப்படும். அதாவது வேலையில்லா இளைஞர்களுக்கு ஒரு ஆண்டுக்கு மாதம் 8500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பிரிட்டன், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இதுபோல வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு உதவித் தொகை தரும் திட்டங்கள் இருக்கிறது. அதேபோன்ற ஒரு திட்டத்தைத் தான் காங்கிரஸ் முன்மொழிந்துள்ளது. விரைவில் லோக்சபா தேர்தலில் இது ஒரு கேம் சேஞ்சர் அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள திறமையற்ற இளைஞர்களுக்கும் திறன் பயிற்சி அளிப்பதால் அந்த பிரச்சனையையும் தீர்க்கும்.

காங்கிரஸின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, “எங்கள் தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் வாக்குறுதியும் இருக்கிறது” என்றார். இது தவிர நாடு முழுக்க மத்திய அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் வேலைகள் உடனடியாக நிரப்பப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு முதல் பணி நியமனம் வரை எப்போது நடக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வெளிப்படைத்தன்மையுடன் போட்டி தேர்வுகள் நடத்தவும், வினாத்தாள் கசிவதைத் தடுக்கவும் உயர் தரத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். இது தவிர உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலைச்சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என இளைஞர்களைக் குறிவைத்துத் தேர்தல் அறிக்கையைக் காங்கிரஸ் ரெடி செய்துள்ளது. இது லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடியைத் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.