தமிழ்நாட்டை குறிவைத்துதான் அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள்: திருமாவளவன்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

நாடே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து 27ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதனால் மற்ற மாநிலங்களுக்கு முன்பாக தமிழகம் அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல், கொமதேக கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதிமுக மற்றும் பாஜக ஆகியவை தனி அணி அமைத்து போட்டியிடுகின்றன. எனினும், இரு கட்சிகளும் இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை.

கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து முறைக்கு மேலாக பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுள்ளார். தமிழகத்திற்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் பிரதமர் தமிழகத்திற்கு பல முறை வந்து பரப்புரை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

கடந்த முறை மார்ச் 10ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவித்தனர். இந்த முறை தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. இரண்டு தேர்தல் ஆணையர் பதவிகள் காலியாக இருந்தன. அதனால் ஒரு வாரம் தாமதமாக தேர்தல் தேதியை அறிவித்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செல்வதற்கு இன்னும் 3 நாட்கள்தான் இடைவெளி உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக ஆகியவை இன்னும் கூட்டணியே அமைக்கவில்லை. இவ்வளவு நெருக்கடியான சூழலில் ஒருவார கால இடைவெளி கூட தராமல் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்கள்.

வட மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. இதில் ஏதோ அரசியல் தலையீடு இருப்பதை உணர முடிகிறது. தமிழ்நாட்டை குறிவைத்துதான் அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பே ஒரு சான்றாக உள்ளது.

முதற்கட்ட வாக்குப் பதிவுக்கும் ஏழாம் கட்ட வாக்குப் பதிவுக்கும் இடையே 45 நாட்கள் என்கிற மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஏன் இவ்வளவு இடைவெளி என்ற கேள்விகள் எழுகின்றன. அதேபோல வாக்குச் சீட்டு முறை இருந்தபோதே ஒரே கட்டத்தில் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது. அப்படி இருக்க தற்போது ஏன் ஒரே கட்டத் தேர்தலை நடத்த முடியாது. இவையெல்லாம் வலுவான சந்தேகங்களை எழுப்புகிறது.

வட மாநிலங்களில் குறிப்பாக ஒரே மாநிலத்தில் ஏழு கட்டங்கள் தேர்தல் நடப்பது இன்னும் சந்தேகத்தை வலுவாக்குகிறது. ஆகவே, இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அனைத்து ஆணையர்களும் பாஜக அரசுக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறார்கள் என்னும்போது தேர்தல் ஆணையம் மீது நம்பகத்தன்மை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.