இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

தமிழக மீனவர்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அரசுடன்கலந்துபேசி விரைவில் மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் நல அமைப்பு சார்பில் அதன் தலைவரான பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது இல்லை. இதனால் தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

கச்சத்தீவு விவகாரம் அரசியலாக்கப்படுவதால் தமிழக மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகள் உள்ளிட்ட உடமைகளை விடுவிக்கவும், இந்த விவகாரத்தில் நிரந்தரதீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மவுரியா ஆஜராகி இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

அப்போது மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மீன்பிடி உரிமை மற்றும் கச்சத்தீவு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இருநாட்டு அமைச்சகங்கள் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு கூட்டு பணிக்குழு அமைக்கப்பட்டது. இதில் இருநாட்டு மீன்வளத் துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். இந்த கூட்டுபணிக்குழுவின் 6-வது கூட்டத்தை இந்தியா சார்பில் கூட்ட வேண்டும். அதன்படி கடந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் இந்த கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு இலங்கைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இலங்கையில் நிலவும் உள்நாட்டு பிரச்சினை காரணமாக இலங்கை அரசிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. இந்தக் கூட்டத்தை விரைவில் கூட்டி இப்பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வரும் ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் தமிழக மீனவர்களின் அவல நிலையை மத்திய அரசு கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை இலங்கையுடன் கலந்து பேசி எவ்வளவு விரைவாக கூட்ட முடியுமோ, அவ்வளவு விரைவாக கூட்டி இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.