காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை துண்டாடுகிறது: பிரதமர் மோடி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக் சிந்தனைகள் இருப்பதாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதே காங்கிரஸ் நோக்கம் என்று சாடியுள்ளது.

விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. தேசியளவில் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது. இன்னும் 2 வாரங்களில் லோக்சபா தேர்தல் தொடங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி சரமாரியாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை என்று விமர்சித்த அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும் இந்தியாவைத் துண்டாட முயல்கிறது என்று சாடினார்.

ராஜஸ்தானின் அஜ்மீரில் இன்று நடந்த பாஜக பேரணியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள விஷயங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்து முஸ்லிம் லீக்கின் சிந்தனைகளை ஒத்திருப்பதாக விமர்சித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், அது இந்தியாவைத் துண்டாடும் என்றும் சாடியுள்ளார். பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பொய் மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு பக்கத்திலும் இந்தியாவைத் துண்டாக்கும் முயற்சிகள் தெரிகிறது. இது சுதந்திரத்திற்கு முன் முஸ்லிம் லீக் கொண்டிருந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. முஸ்லிம் லீக்கை திணிக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. இன்றைய இந்தியாவில் அன்றைய முஸ்லீம் லிங் சிந்தனைகளைத் திணிக்க முயல்கிறது. இதைத் தவிர்த்துப் பார்க்கும் போது அந்தத் தேர்தல் அறிக்கையில் எஞ்சியிருப்பது கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சிந்தனைகள் மட்டுமே. இன்றைய காங்கிரஸ் கொள்கைகள் இல்லாமல் தடுமாறுகிறது. அக்கட்சி எல்லாவற்றையும் அவுட்சோர்சிங் செய்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுபோன்ற கட்சியால் நாட்டின் நலன் கருதி எதையும் செய்ய முடியாது. அவர்கள் இந்தியாவைக் கடந்த நூற்றாண்டிற்குத் தள்ள விரும்புகிறார்கள் என்பது அவர்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது. பெண்கள் சக்தி பற்றி காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பெண்கள் பல தலைமுறைகளாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்குக் காங்கிரஸ் என்ன செய்தார்கள். இப்படி உங்களுக்கு உதவாத காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

கழிவறைகள் கட்டுதல், குழாய் நீர் என்று பெண்களுக்காக நாங்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். ராணுவத்தில் இணையப் பெண்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஆறு மாத மகப்பேறு விடுப்பை உறுதி செய்தோம். சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். சைக்கிள் ஓட்ட முடியாத நம் கிராமங்களில் இருந்த பெண்கள் ஆளில்லா விமானங்கள் ஓட்டுகிறார்கள். பல இஸ்ரோ திட்டங்கள் இப்போது பெண்களால் கையாளப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு டிரைய்லர் தான்.. நாங்கள் எங்கள் நாட்டை இன்னும் முன்னோக்கிக் கொண்டு செல்வோம். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு அதை நோக்கிப் பயணிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.