தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு எந்த முகத்துடன் மோடி இங்கு வந்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு இப்போது எந்த முகத்துடன் பிரதமர் மோடி இங்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு ஓட்டு கேட்க வந்திருக்கிறார்? என்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின் மோடியை விமர்சித்து பேசினார்.

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதி தவறிய மன்னனை கண்ணகி கேள்வி கேட்ட மதுரை மண்ணுக்கு வந்துள்ளேன். தற்போதைய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார். மராட்டியத்தில் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கவிழ்த்துவிட்டு அந்த மாநிலத்தையே நாசமாக்கி விட்டார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் மட்டும் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுப்பது தான் மோடியின் ஆட்சி. பிரதமர் மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை. பெண் சக்தி குறித்து மோடி பேசி வருகிறார். டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்ட போது மோடி எங்கே போனார்?.. குஜராத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது பாஜக அரசு.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பவர் தான் மோடி. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக அநீதி நடக்கும் போது பிரதமர் மோடி வேடிக்கை பார்த்தார். ஒரு முறையாவது மணிப்பூர் சென்று அங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினாரா?. பிரதமர் மோடியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரியும். தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை முடக்கி போட்டவர் தான் பிரதமர் மோடி. இதுவரை தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன என்று மோடியால் பட்டியல் போட்டு சொல்ல முடியுமா?.. தமிழ்நாட்டு மக்கள் மீது ஏன் உங்களுக்கு வன்மம். தமிழ்நாடு மக்கள் மீது ஏன் உங்களுக்கு ஓரவஞ்சனை?.. பேரிடர் நிதி கூட கொடுக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்க உங்களிடம் கேட்டால் அதை கூட பிச்சை என கொச்சைப்படுத்துகிறார் நிர்மலா சீதாராமன். இப்படி தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு இப்போது எந்த முகத்துடன் பிரதமர் மோடி இங்கு வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு ஓட்டு கேட்க வந்திருக்கிறார்?. பாஜக அரசு நம் நாட்டை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டது. பெட்ரோல் டீசல் விலையை ஒரே அடியாக உயர்த்திவிட்டார். தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுக இரண்டையும் ஒருசேர வீழ்த்த வேண்டும். பாஜகவுக்கு அளிக்கிற வாக்கு தமிழ்நாடு எதிரிகளுக்கு அளிக்கின்ற வாக்கு. அதிமுகவிற்கு அளிக்கின்ற வாக்கு துரோகிகளுக்கு அளிக்கின்ற வாக்கு. எனவே திமுக, திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு அளியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.