வேங்கைவயல் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம்: அண்ணாமலை!

வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேங்கை வயல் கிராம மகக்ளுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் ரீதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மனித கழிவு மாதிரியிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும், சந்தேகத்தின் பேரில் 30-க்கும் மேற்பட்டோரிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதற்கட்ட முயற்சியில் குற்றவாளிகள் யாரென கண்டறிய முடியவில்லை. அதைத்தொடர்ந்து, குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 பேரிடம் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 3 பேருக்கு நடத்துவதற்கான பணி நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை கண்டறிந்து விரைவாக கைது செய்ய வேண்டும் என வேங்கைவயல் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் வேங்கைவயல் மக்கள் ஒரு பேனர் ஒன்றை வைத்துள்ளனர். குடிநீர் தொட்டில் மலம் கலந்ததற்கு நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாத திமுக அரசை கண்டித்துள்ளதோடு, வேங்கைவயல் மக்கள், மாற்றத்திற்காக வாக்களிக்க முன்வர வேண்டும், தங்கள் வாக்குகளின் வலிமையை திமுக அரசுக்கு உணர்த்துவதுதான் உண்மையான பதிலடியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கண்துடைப்பு விசாரணை நடத்தி, கிட்டத்தட்ட அந்த சம்பவத்தைப் பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க முயற்சித்து வருகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, வேங்கைவயல் மக்கள், தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். வெறும் வாய்வார்த்தைகளில் மட்டும் சமூக நீதி பேசி, இத்தனை ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலும், கையாலாகாத்தனமுமே இதற்கு ஒரே காரணம். வேங்கைவயல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும், அங்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறக் கூட மனமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது?

வாக்களிப்பது குடிமக்களின் ஜனநாயக உரிமை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்திருப்பது, மிகவும் வருத்தத்திற்குரியது. வேங்கைவயல் மக்கள், மாற்றத்திற்காக வாக்களிக்க முன்வர வேண்டும். தங்கள் வாக்குகளின் வலிமையை திமுக அரசுக்கு உணர்த்துவதுதான் உண்மையான பதிலடியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.