செந்தில் பாலாஜியை ஏப்.22-ல் நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, இருதரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் குறிப்பிட்ட தேதியில் தீர்ப்பளிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

ஆனால், இந்த வழக்கில் தாங்கள் கோரிய வங்கி தொடர்பான ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த வழக்கில் தங்களது தரப்பில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாதங்களை மீண்டும் முன்வைக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும் (சலான்கள்), அமலாக்கத் துறை வழங்கிய வங்கி சார்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் செந்தில் பாலாஜிக்கு வழங்க இருப்பதால், அவரை, ஏப்ரல் 22-ம் தேதி 3 மணிக்கு மேல் நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஏப்.22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவது இது 33வது முறையாகும்.