டிடி தொலைக்காட்சி லோகோ காவி வண்ணத்துக்கு மாற்றப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை” என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள். தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள். வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள். பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள். தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்.

தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.