கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு!

கடலூரில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பொய் செய்தியைப் பரப்பிய குற்றச்சாட்டில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண் வாக்குப்பதிவு நடந்த ஏப்பல் 19ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது கொலை குறித்து இணையத்தில் பல வித தகவல்கள் பரவின. அதாவது அவர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை திமுகவினர் அடித்தே கொலை செய்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. பாஜகவினர் பலரும் இந்தச் சம்பவத்திற்கு தங்கள் கண்டங்களைத் தெரிவித்தனர். அதேபோல பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்திற்குக் கண்டனம் தெரிவித்தார். மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க என்று வலியுறுத்தி இருந்தார்.

அண்ணாமலை இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது. இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருந்தார்.

இருப்பினும், இது தொடர்பாகக் கடலூர் போலீசார் விளக்கமளித்துள்ளனர். அதாவது பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட மோதலிலேயே கோமதி உயிரிழந்ததாக விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கிடையே பொய் தகவல்களைப் பரப்பியதற்காக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் ஸ்ரீமுஷ்ணம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து கடலூர் பெண் கொலை வழக்கில் பொய் செய்தி பரப்பியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.