முல்லை பெரியாற்றில் புதிய அணை: விவசாயிகள் மதுரை தபால் தந்தி அலுவலகம் முற்றுகை!

முல்லைப் பெரியாறில் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் ஜீவாதாரமாக விளங்கி வருகிறது. ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் முயற்சியால் கட்டப்பட்ட இந்த அணை கேரள மாநில எல்லை பகுதியில் அமைந்திருந்தாலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெரியாறு மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை மறித்து நீரை கிழக்கு நோக்கி திருப்பி மழை மறைவு பகுதியான தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டத்திற்கு பயன்படுத்தவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். அணையின் நீர்மட்டம் 155 அடியாக உள்ளது. சுரங்கம் வழியாக தமிழக எல்லையில் உள்ள சுருளி, வைகையாற்றில் திருப்பி விடப்பட்டு தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு பெரியாறு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுகிறது.

தமிழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடக்கத்தில் இருந்த பல்வேறு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறது. அணை பலமாக இல்லை என கேரள அரசு தொடர்ந்து தெரிவிக்கிறது. இதனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலத்துக்கும் தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசு மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது. இதற்கான நிபுணர் குழு கூட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்காலிகமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசும், தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று தேனி மாவட்டத்தில் இருந்து 5 மாவட்ட விவசாயிகள் பேரணியாக முல்லைப்பெரியாறு அணையை நோக்கி சென்றனர். ஆனால் தமிழக எல்லையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று மதுரை தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் புதிய அணை கட்டும் கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், மதுரையிலுள்ள வருமான வரி துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காலை தமுக்கம் பகுதியில் திரண்டனர்.

அவர்கள் பிபி குளம் வருமான வரி துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. காவல் துறையினர் உரிய அனுமதி அளிக்காததால் விவசாயிகள் வேறு வழியின்றி தமுக்கம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், கேரள அரசின் செயல்பாட்டால் அதிர்ச்சி அடைந்த விவசாயி பஞ்சநாதன் உயிரிழந்தது போல நடித்துக் காட்டப்பட்டது. உயிரிழந்ததாக கருதப்பட்ட விவசாயி பஞ்சநாதனை சுற்றி மற்ற விவசாயிகள் மாரடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், அத்துடன் கேரள அரசு வெளியிட்ட புதிய அணை கட்டும் அரசாணையை விவசாயிகள் தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிஆர்.பாண்டியன் கூறியதாவது:-

கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்துள்ளது. மத்திய அரசு கேரள அரசின் சுற்றுச்சூழல் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இணைந்து நீராதாரத் திட்டங்களை தாரை வார்க்க நடவடிக்கை எடுக்கிறார். முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையில் அதிமுக ஆட்சியில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதற்கும் கீழாகவே நீர் தேக்கப்படுகிறது. கேரள அமைச்சர்கள் அவ்வப்போது அத்துமீறி அணை இருக்கும் பகுதிக்குள் நுழைந்து தண்ணீரை திறந்து விடுகிறார்கள். தமிழகத்தின் நீராதார உரிமைகளை காக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்ற வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாகவே தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் காக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.